Saturday 10 November 2012

வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன் – 1

அறிமுகம்
1962ம் ஆண்டு. அப்போது எனக்கு வயது 12. நான் தர்மபுரியில் ஏழாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். என் தந்தையாரின் நண்பர் திரு. ரெங்கநாத செட்டியார் என்பவர் என் தந்தையிடம் வந்து, “பையனைக் கொஞ்சம் என் கூட அனுப்பி வை. சாமியார் வரார் ! மேடையில் நாற்காலி டேபிள் போடணும். சுத்தமாய் வைக்கணும்” என்றார். சமரச சன்மார்க்க சங்கம் சார்பாகக் கூட்டம் ஸ்கூலில் நடந்தது. எங்க அப்பாவும் என்னை அனுப்பி வைத்தார்.
நான் எங்க ஸ்கூலுக்கு (ஜில்லா போர்ட் உயர்நிலைப்பள்ளி, தர்மபுரி) சென்று மேடையில் நாற்காலி, மேசை போட்டு டேபிள் க்ளாத் மேலே போட்டு, நாற்காலி மேலே வெல்வெட் விரித்துக் கொண்டிருந்தேன்.
”இவ்வளவு அலங்காரம் தேவையோ?!” என்று எனக்குப் பின்னால் ஒரு குரல்.
திரும்பிப் பார்த்தேன். ஒரு சாமியார் எனது கன்னத்தில் தட்டினார். அதுதான் முதல் ஸ்பரிசம்.
வெல்வெட் துணி அப்புறப்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. திரு. கிரிதாரிபிரசாத் ஒரு மணிநேரம் முழங்கினார்.
ஆரவாரமான, உணர்ச்சிப் பிழம்பு போன்ற கிரிதாரி பிரசாத்தின் பேச்சுக்குப் பிறகு சாமியார் பேசினார்: “மழை பெய்து ஓய்ந்தது. சற்றே ஈரம் வற்றியபின், உங்கள் மனவயலை உழுது, விதை விதைக்கலாம் என்று இருக்கிறேன்” என்று தன் பேச்சைத் துவக்கினார்.
அந்த இரண்டு வரிகள் ஐம்பது ஆண்டுகள் கடந்தும்கூட இன்னும் நினைவில் உள்ளன. ஒரு மணி நேரம் பேசினார் அவர்.
இதுதான் முதல் சந்திப்பு.
ஒவ்வொரு ஆண்டும் அந்தர் யோகமும், சன்மார்க்க சங்கக் கூட்டமும் நடக்கும். அதற்கு வருவார். அப்போது எனக்கு அழைப்பு வரும். வேலை செய்ய !

அவர் பெயர் சித்பவானந்த சுவாமிகள் என்று சொன்னார்கள். என்னுடன் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார். ஓரளவு பழகினார். ரொம்ப ரிசர்வ்டாக இருந்தார். மேடையில் கூடக் கடிவாளம் போட்ட குதிரைதான். வாரியார் பேச்சுப் போல அங்கிங்கு திரும்பாமல், ஸ்பின்னிங் மில் ஓடுவது போல ஒரே சீராக இருக்கும். எடுத்துக் கொண்ட தலைப்பைப் பற்றி மட்டுமே பேச்சு இருக்கும்.

மிராக்கிள்
நான் டிகிரி படித்த முடித்த உடன் அவரிடம் சொன்னேன். அடுத்த ஆண்டு ஆசிரியர் பயிற்சிக்குச் சென்று சேருங்கள் என்றார். அவர் பேச்செல்லாம் ஒரே ஆர்டர் மயம்தான்.
“நான் இந்த வருஷமே போய்ச் சேருகிறேன்” என்று சொன்னேன்.
“இரண்டு வேலைகள் பாக்கி இருக்கு. அவை முடியட்டும்” என்றார் அவர்.
அந்த ஓராண்டில் என் தகப்பனாரும், அதன் பின் தொடர்ந்து என் தாயாரும் வைகுண்ட பதவியை அடைந்தனர். நிஜமாகவே அங்கு போனார்களா என்பது எனக்குத் தெரியாது ! ஆனால், சுவாமி சொன்ன இரண்டு வேலைகள் இவைதான் என உணர்ந்து கொள்ள முடிந்தது.
இது மிராக்கிளாக இருந்தாலும் கையில் மாயமாக திருநீறு வரவழைக்கும் அளவுக்கு இவரை நினைக்க முடியவில்லை. அந்தச் சிறிய வயதில் மிராக்கிள் என்னைக் கவர்ந்திருக்கலாம்.
என்னுடைய டிகிரியை எடுத்துக் கொண்டு கோவை பெரிய நாயக்கன்பாளையம் இராமகிருஷ்ண மிஷனுக்குச் சென்று சுவாமி சோமானந்தா முன்னால் ஆஜர் ஆனேன். அவர் கேட்டார்: “உன்னை யார் அனுப்பியது?”
“சுவாமி சித்பவானந்தர்”.
“ஓ ! அப்படியா ! சரி. அப்பிளிகேஷன் போடு. கிடைக்கும்”.
இந்த சுவாமி ஊட்டி ஆசிரமத்தில் சித்பவானந்தரிடம் பிரம்மச்சாரியாக இருந்தார் எனப் பின்னால்தான் தெரிந்தது. அங்கு சேர்ந்து விட்டேன்.
அதன்பிறகு அவினாசிலிங்கம் ஐயா பழக்கமானார். ஆனால் அவரும் சித்பவானந்தரும் முப்பது ஆண்டுகளுக்கு முன் தோழர்களாக இருந்தவர்கள் எனத் தெரியாது. ஒரு நாள் திரு. பி.கே. நடராஜன் அவர்கள் இருவரும் இணைவதற்கான ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.
அப்போது சுவாமி சித்பவானந்தர் அங்கு வந்திருந்தார். நான் அவரைப் பார்க்கச் சென்றேன்.
சுவாமி: “படிப்பு நடக்குதோ?”
நான்: “ஆம், சுவாமி”.
சுவாமி: “படிச்சுட்டு அங்கு (திருப்பராய்த்துறை) வந்துட வேண்டியது”.
நான்: “அங்க இடம் இருக்கா?”
சுவாமி: “தானாக வரும்.”
இந்த உரையாடலின் போது சுவாமி குகானந்தர் உடனிருந்தார்.
அதன்பின் வித்யாலயா ஆடிட்டோரியத்தில் இணைப்பு விழா நடந்தது. அனைவரையும் சேர்த்து 4000 ஆசிரியர்கள் பேராசிரியர்கள் மாணவர்கள் ஊழியர்கள் வந்திருந்தனர்.
அமரர் அவினாசிலிங்கம் அந்த மேடையில் சுவாமியை விட்டு அவர் பிரிந்தது குறித்துத் தேம்பித் தேம்பி அழுதார்.
உடனே சுவாமி:
“இங்கு அழுகை, கூக்குரல், ஒப்பாரி வைக்க அனுமதில்லை. பேசவேண்டிய விஷயத்தைப் பேசிவிட்டு வந்து அமரலாம்” என்றார்.
அவினாசிலிங்கம் ஐயா அடங்கிப் போனார். அந்தக் கேம்பஸில் ஐயா அடங்கிப் போனது அதுவே முதல் முறை.

நிற்க. நம் கதைக்கு வருவோம். என் படிப்பு முடிந்தது. ரிசல்ட் வருவதற்கு முன்பே சுவாமி நித்யானந்தரிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. ஆசிரியர் ஒருவர் இறந்து விட்டதால் காலியான வேலைக்கு நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு.
“தானாக வரும்” என சுவாமி சொன்னது நினைவுக்கு வந்தது. மீண்டும் மிராக்கிள்.
சென்றேன். சுவாமியைப் பார்த்தேன்.
சுவாமி: “என் மூலமாக வருகிறீர்கள் என்று தலைமையாசிரியரிடம் கூறக்கூடாது. தகுதி இருந்தால் செலக்ட் ஆகலாம்”.
பள்ளிக்குச் சென்று குளோரின் என்ற பாடம் சொல்லிக் கொடுத்தேன். 14 பேர் வந்திருந்தார்கள். எனக்குப் போட்ட மதிப்பெண்கள் அதிகமாக இருந்ததால் பணிக்குச் சேர்ந்தேன். சுவாமியிடம் போய் ஆசி வாங்கினேன். அப்போதும் கேட்டார்:
“தலைமையாசிரியரிடம் எதாவது சொன்னீர்களா?”
நான்: “இல்லை”.
தினந்தோறும் காலையில் சென்று பாத நமஸ்காரம் செலுத்துவேன். “ஊம்” என்று ஒரு சிங்க கர்ஜனை மட்டும் கேட்கும். நம் மேல் பார்வை விழும். அவ்வளவுதான். அதற்கு மேல் நேரம் ஒதுக்க மாட்டார். என் பிறந்த நாள் அன்று மட்டும் “மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ்” என்று சொல்லுவார்.

துறவியும் எம்.ஜி.ஆரும்
ஒவ்வொரு நிமிஷமும் உபயோகமாகச் செலவிடுவார். காலையில் 2.30 மணிக்கு எழுந்திருந்து, தன் துணிகளைத் தானே துவைத்து, குளித்து முடித்து, கோயிலைத் திறந்து, திருப்பள்ளி எழுச்சி, கீதை, நாமாவளி, தியானம் முடித்து, சிறுவர்கள் உடற்பயிற்சியைப் பார்வையிட்டு, அதன்பின் நடைப்பயிற்சி முடிந்து, ஆஜர் எடுத்து, மாணவர்களோடு சாப்பிட்டு, ஹிந்து எக்ஸ்பிரஸ் இரண்டும் படித்து முடித்து, பின் கடிதங்களுக்குப் பதிலெழுதி, ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி, கடிதங்களுக்குப் பதிலெழுதி, உச்சிகால வழிபாட்டில் கலந்துகொண்டு, உணவும் ஓய்வும் முடித்து, மீண்டும் படித்தல் எழுதுதல் முடித்து, மாலை நடைப்பயிற்சி, வழிபாடு, தியானம், உணவு, சத்சங்கம் முடித்து, இரவு 10.30 மணிக்கு உறங்கச் செல்வார்.
கிழக்கு நோக்கி உள்ள இராமகிருஷ்ணர் கோயிலில் வடக்கு நோக்கி அமர்ந்து தியானம் செய்வார். வடக்கு நோக்கி ஸ்நானம் செய்வார். தெற்கு நோக்கி உணவு உட்கொள்வார். மேற்கு நோக்கி அலுவல் புரிவார். இறுதிவரை இந்த திசைகள் மாறியதில்லை.
இந்த நடைமுறைகள் இறுதிவரை மாறவில்லை. சுகவீனம் அடைந்தபோதும் தொடர்ந்தன.
நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில் மிகக் கண்டிப்பானவர் சுவாமி சித்பவானந்தர். ஒருமுறை சேலம் சாரதா கல்லூரி விழாவுக்குக் காலதாமதமாக வந்தார் ஒரு பிரதம விருந்தாளி. வந்தவர் சாதாரணமானவர் அல்ல. தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். தான் அந்தப் பிரதம விருந்தாளி.
ஆனால், சித்பவானந்த சுவாமியோ நேரத்தை மிக முக்கியமானதாகக் கருதுபவர். எதையும் யாருக்காகவும் கொஞ்சம்கூட விட்டுக்கொடுக்காத உறுதிப்பாடு உடையவர். எம்.ஜி.ஆர். வந்தவுடன் மேடையில் எல்லார் முன்னிலையிலும் வைத்தே கேட்டு விட்டார்:
“ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவர் 15 நிமிடங்கள் தாமதமாக ஒரு நிகழ்ச்சிக்கு வருவது நல்ல எடுத்துக்காட்டாக அமையுமா?”
உடனடியாக எம்.ஜி.ஆர். மன்னிப்புக் கேட்டார்: “சாமி உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் குறித்த நேரத்துக்குள் வரவே முயன்றேன். ஆனால், என்னுடைய தொண்டர்களால் இந்த தாமதம் ஏற்பட்டு விட்டது. அவர்களுக்கு மூளையே இல்லை. அதனால்தான் அவர்களுக்குத் தலைவனாக இருக்கிறேன்” என்று சொன்னதும் சுவாமி சிரித்து விட்டார்.
பின்பு எம்.ஜி.ஆர் அவருக்குப் பாத நமஸ்காரம் செய்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

“விவேகானந்தரைத் தேடுகிறேன்”.
டைனிங் ஹாலிலும் சரி, அட்டெண்டன்ஸ் எடுக்கும்போதும் சரி மாணவர்களை உச்சிமுதல் உள்ளங்கால் வரை கூர்ந்து நோக்குவார். பொறுமையிழந்த நான் ஒரு நாள் அவரிடம் சென்று,
“அப்படியென்ன தேடுகிறீர்கள் ? யாரைத் தேடுகிறீர்கள்” எனக் கேட்டேன்.
“விவேகானந்தரைத் தேடுகிறேன்”.
“கிடைத்தாரா?”
அவர் உதட்டைப் பிதுக்கினார். இல்லையென்றும் சொல்லவில்லை.
ஒரு நாள் ஆசிரியர் கூட்டத்தில் “இவ்வளவு காலமாகக் குருகுலம் நடத்துகிறோம். ஒரு மாணவன்கூடத் துறவியாக வரவில்லையே? இவர்களைத் துறவி ஆக்கும் அளவுக்கு நமக்குத் தகுதி இல்லையோ?” என அங்கலாய்த்துக் கொண்டார்.

ஊக்கமுடைமை
பள்ளியில் 75-76ம் கல்வியாண்டில் ஓர் அறிவியல் பொருட்காட்சி வைத்திருந்தேன். சுவாமி உள்ளிட்ட பெரியவர்கள் அனைவரும் பாராட்டினர். சுவாமி என்னைத் தனிப்பட்ட முறையில் பாராட்டினார். அதைத் தொடர்ந்து பரமஹம்சரின் விஞ்ஞான விளக்கங்களை “தர்மசக்கரம்” பத்திரிக்கையில் எழுதச் சொன்னார்.

நான் “விஞ்ஞானமும் மெய்ஞானமும்” என்ற தலைப்பில் 15 மாதங்கள் எழுதினேன். ‘செய்து கற்றல்’ என்ற தத்துவ அடிப்படையில் 8ஆம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குச் செய்முறைப் பயிற்சி வகுப்புகளை சுவாமியை வைத்துத் ஆரம்பித்தேன். பி.எச்.இ.எல். தலைவர் திரு. தீனதயாளன் இதைத் துவக்கி வைத்தார்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் மெடிக்கல் காலேஜ் டீன், கல்லூரித் துறைத் தலைவர்கள், கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், பொறியியல் வித்தகர்கள் என இப்படி ஏதாவது ஒருவரை அழைத்து வருவேன்.
எஸ்.எஸ்.எல்.ஸி மாணவர்களுக்கு விஞ்ஞானத் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்ந்துகொண்டே இருந்தன. பள்ளியில் போட்டோ கிராஃபிக் கிளப் செயல்பட்டது. ட்ரான்ஸிஸ்டர் ரேடியோ செய்ய மாணவர்கள் பழக்கப்படுத்தப்பட்டனர். தமிழகத்தில் எந்தப் பள்ளியிலும் இந்த வசதி அந்தக் காலகட்டத்தில் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இவ்வளவுக்கும் சுவாமிதான் எனக்கு ஊக்கம் கொடுத்தார்.

கிருபானந்த வாரியாரும் சுவாமியும்
ஒருமுறை சக்திசங்கத்தின் சார்பாகப் பொள்ளாச்சியில் தொடர் சொற்பொழிவுகள் நடந்தன. சுவாமி நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். பேச்சாளரை ஒவ்வொருவராக அழைத்துப் பேசுமாறு கூறினார். வாரியாரின் முறை வந்தது.
சுவாமி: “இங்கு கேலி, கிண்டல், நையாண்டி செய்து பேசுதல் கூடாது. எடுத்துக் கொண்ட தலைப்பில் இருந்து விலகி வேறு எங்கோ சென்று விடலாகாது. அடுத்து கிருபானந்தவாரி பேசுவார்.”
வாரியாருக்குக் கற்பூர புத்தி. தன்னைத்தான் குறிப்பிடுகிறார் என்று புரிந்துகொண்டு விட்டார். சுவாமியின் பாதங்களில் விழுந்து வணங்கி, “கைலாசம் கண்ட திருவடிகளுக்கு வணக்கம்” என்று கூறித் தன் சொற்பொழிவை வழக்கமான பாணியில் இல்லாமல் சீரியஸாகப் பேசி நல்ல கைத்தட்டல்களைப் பெற்றார்.

ராமகிருஷ்ணர், விவேகானந்தர்
விவேகானந்தர் நூற்றாண்டு விழா சமயத்தில் 3 விவேகானந்தர் சிலைகள் செய்யப்பட்டன. ஒன்று திருப்பராய்த் துறையில் வைக்கப்பட்டது. மற்றொன்று கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் பிரகாரத்தில் உள்ளது. மூன்றாவது திருவேடகத்தில் வைக்கத் தயாரானது. அதில் ஒரு சிறு குறை இருந்தது. சிலையின் கண்ணுக்கு அருகில் மெல்லிய கோடு ஒன்று ஏற்பட்டு இருந்தது.
“தொலைவில் இருந்து பார்த்தால் இந்தக் குறை தெரியாது” என்று ஒருவர் சொன்னார்.
சுவாமி: “அப்ப தொலைவாக இருந்து ஒழுக்கம் கெட்டு வாழலாமா? சிலையை உடைத்து விடுங்கள்”.
ஒரு நிமிடம் உலகம் ஸ்தம்பித்தது.
“என்ன சாமி சொல்றீங்க? விவேகானந்த சாமி சிலையைப் போய்… எப்படி சாமீ…எப்படி சாமி உடைப்பது?” என்றனர்.
“இப்படித்தான்” என்ற சுவாமி கடப்பாரையை எடுத்து சிலையின் கழுத்தில் ஒரு போடு போட்டார். தலை உருண்டது.
“இந்தச் சிலையை உடைத்துக் கல்லூரி கட்டிடத்திற்கு அஸ்திவாரமாகப் போடுங்கள்” எனக்கூறிச் சென்றார்.

இதே போல மற்றொரு நிகழ்ச்சி. ஒருமுறை சுவாமியும், குகானந்தரும், சாந்தானந்தரும் ஒரு ஊருக்குச் சென்றிருந்தனர். அங்கு ஒருவன் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்யப்பட்ட விவேகானந்தர் சிலைகள் இரண்டை விற்றுக் கொண்டிருந்தான். அந்த 2 சிலைகளையும் சுவாமி விலைக்கு வாங்கினார். குகானந்தர் மற்றும் சாந்தானந்தர் இருவருக்கும் அந்தச் சிலைகள் பிடிக்கவில்லை.
“நன்றாக இல்லாத சிலைக்குப் பணம் கொடுத்து வாங்கி இருக்க வேண்டாம்.” என்றனர்.
அதற்கு சுவாமி “அதனால்தான் வாங்கினேன். இதை வாங்குபவர்கள் விவேகானந்தர் இப்படித்தான் இருந்திருப்பார் என்று நினைத்துவிடக் கூடாது என்பதால்தான் வாங்கினேன். அவற்றை உடைத்து விடுங்கள்” என்றார்.
இராமநாதபுரத்தில் தாயுமானவருக்கு சமாதி கோயில் கட்ட ஏற்பாடு ஆனது. அதில் வைக்க தாயுமானவர் சிலைக்கான வடிவமைப்புப் பற்றி சுவாமி யோசித்தார். வித்யாவன மாணவர்கள் அனைவரையும் வரிசையாகப் பரிசோதனை செய்து சிலரைத் தேர்ந்தெடுத்தார். கண்ணுக்கு ஒரு மாணவனையும், காதுக்கு ஒருவனையும், மூக்கிற்கு ஒருவனையும், கழுத்துக்கு ஒருவனையும், மண்டைக்கு ஒருவனையும், உடல் வாகுக்கு ஒருவனையும் தேர்ந்தெடுத்தார். சிற்பியை அழைத்து இந்த சாமுத்ரிகா லக்‌ஷணப்படி சிலை அமைக்கச் சொன்னார். அதன்படி சிலையும் நன்கு அமைந்தது.

ராமசாமி பெரியாரை விழுங்கியாச்சு
சுவாமிக்கு உடல்நலம் குன்றியபோது மருத்துவர்கள் கொடுத்த குழாய் மாத்திரைகளை பிரம்மச்சாரி நாகசுந்தரம் கொடுத்தார். ஒரு நாள் கருப்பு சிகப்பு வண்ணத்தில் இருந்த குழாய் மாத்திரைகள் இரண்டு கொடுக்கப்பட்டன. அவற்றை சுவாமி வாயில் போட்டுத் தண்ணீர் குடித்தார்.
“ராமசாமி பெரியாரை விழுங்கியாச்சு” என்று சொல்லி சிரித்தார். உடன் இருந்தவர்களும் சிரித்தனர். அதாவது நாத்திக வாதத்தை சுவாமி விழுங்கி விட்டதாகப் பொருள்.
செப்டிக் டேங்க் சுத்தப்படுத்த ஆட்கள் வரவில்லை. பள்ளி திறந்து விட்டால் குழந்தை வந்தபின்பு இந்த வேலைகளை வைத்துக் கொண்டால் அவர்களுக்குச் சிரமம். “ஆட்கள் வரவில்லையே. எப்படி சுவாமி சுத்தப்படுத்துவது?” என்றனர்.
“இதோ இப்படித்தான்” என்று கூறி சுவாமி மலக்குழிக்குள் குதித்து விட்டார். பக்கெட்டில் மனிதக் கழிவுகளைத் தானே எடுத்து அப்புறப்படுத்தினார். அதன்பின் மற்றவர்களும் வேலையில் இறங்கினர். பூர்வாசிரமத்தில் சுவாமி மாபெரும் தனவந்தர் குடும்பத்தில் பிறந்தவர்.

நமக்கேற்ற கோலத்தில் முருகன்
ஒருமுறை பழனி முருகனைத் தரிசிக்க சுவாமி மலையேறிக் கொண்டிருந்தார். அப்போது வின்ச், ரோப் கார் போன்றவை கிடையாது. பாதி தூரம் கடந்து விட்டார். ஸ்ரீ சாது சுவாமிகள் மேலேயிருந்து கீழே வந்து கொண்டிருந்தார். சுவாமியைப் பார்த்து
“தரிசனத்துக்கோ?” என்றார்.
சுவாமி: “ஆமாம் சுவாமி”.
சாது: “சரி. வாருங்கள். உங்களுக்காக நானும் திரும்ப மலையேறுகிறேன்” என அழைத்துச் சென்றார்.
“உமக்கு எந்தக் கோலத்தில் தரிசனம் வேண்டும்?” என்று கேட்டார்.
சுவாமி: “நமக்கேற்ற கோலத்தில்தான் !”
முருகனின் ராஜ அலங்காரம் மாற்றப்பட்டு ஆண்டிக் கோல அலங்காரம் செய்யப்பட்டது. பொதுஜன தரிசனம் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது. மூலஸ்தானத்தில் சுவாமி அமர்ந்து தியானம் செய்ய வசதி செய்து தரப்பட்டது.

சில அனுபவங்கள்
தபோவன பிரார்த்தனை மண்டபத்தில் சுவாமி யோகானந்தர் அருமையாகப் பாடிக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் பாடி முடித்தவுடன் சுவாமியிடம் சென்று, “சுவாமி, நான் பாடினேனே, கேட்டதா?” என்று கேட்டார்.
“கேட்டேன்”
“என் பாட்டு நன்றாக இருந்ததா சுவாமி?”
“நீ பாடியது நன்றாக இருந்தது. நீ பாடாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.”
சுற்றி இருந்தவர்கள் சிரிப்பலை அடங்க வெகு நேரமாயிற்று.
ஒருமுறை ஓர் அழகான கலைநயமிக்க பூந்தோட்டத்தை உருவாக்கி இருந்தேன். குருதேவர் (ராமகிருஷ்ண பரமஹம்ஸரின்) ஜெயந்தி விழாவுக்காக அதைச் செய்திருந்தேன். அதனருகில் ‘தோட்டத்தை ரசிக்கும் மக்கள் தோட்டக்காரனை நினைத்துப் பார்ப்பதில்லை. உலகை அனுபவிக்கும் மக்கள் அதைப் படைத்த இறைவனை நினைப்பதில்லை’ என்று ஒரு போர்டு வைத்திருந்தேன்.
சுவாமி அந்தப் பக்கமாக வந்தார். தோட்டத்தை ரசித்துப் பார்த்தார். பலகையில் எழுதி இருந்ததையும் படித்தார். என் அருகில் வந்து “நான் உங்களை நினைத்துப் பார்க்கிறேன்” என்று கூறி விட்டுச் சிரித்தார்.
குருகுலத்தில் சின்னப்பா என்ற ஆசிரியர் நாடகத்துறைக்குப் பொறுப்பாளராக இருந்தார். ஒருநாள் சுவாமியிடம் அவர், “சும்மா போட்ட நாடகத்தையே திருப்பிப் போட்டு அலுத்துவிட்டது. அரைத்த மாவையே அரைப்பது சலிப்பாக உள்ளது. புது நாடகம் தேவை” என்றார்.
“சின்னப்பா ! நமது அடுத்த நாடகம் வேடன் கண்ணப்பா !” என்றார். அதைக் கேட்டு சின்னப்பாவும் சந்தோஷப்பட்டார். ஆனால், கடைசிவரை சுவாமி அந்த நாடகத்தை எழுத முடியவில்லை.

திரிகாலஞானி
1980ல் தபோவனத்தைச் சேர்ந்த துறவி ஒருவர் காவிரியில் குளிக்கும்போது அகால மரணம் அடைந்திருந்தார். அந்தச் சமயத்தில் ஒருமுறை மாணவர்கள் வரிசையாக நின்று சாமியிடம் ஆஜர் கொடுத்துக் கொண்டிருந்தனர். இளம்பிள்ளைகள். கள்ளமறியாத கன்றுகள். ஒரு மாணவன், “சுவாமி. அந்த சாமி செத்துப் போயிட்டார். நீங்க எப்ப செத்துப் போவிங்க?” என்று கேட்டு விட்டான்.
அதற்கு சுவாமி சிறிதும் அதிர்ச்சி அடையாமல், “இன்னும் 5 வருஷம்” என்றார். அதே போல் 5 வருஷம் தான் இருந்தார்.
(தொடரும்)
இக்கட்டுரை ஆசிரியர் திரு.வ.சோமு அவர்கள் தனது பன்னிரெண்டாம் வயதிலிருந்து சுவாமி சித்பவானந்தரை அறிந்தவர். 1974 முதல் 1985 வரை உடனிருந்தவர். இன்றும் தபோவனத்துடன் தொடர்பில் இருந்து தொண்டுகள் புரிந்து வருகிறார். www.rktapovanam.org மற்றும் http://rkthapovanam.blogspot.com ஆகிய இணையதளங்களை நடத்தி வருகிறார். தர்ம சக்கரம், ஆன்மீக ஆலயம், ராமகிருஷ்ண விஜயம், வாராஹி விஜயம் ஆகிய பத்திரிகைகளில் ஆன்மீக கட்டுரைகள் எழுதி வருகிறார்.

[பாகம் 2] குதி. நீந்தி வா !

மாணவர்கள் பார்வையில் சுவாமி சித்பவானந்தர்
திருச்சி  திரு. வி. லெட்சுமணசுவாமி
விடுதி எண் : 173
நான் விவேகானந்த வித்யாவனத்தில் 1977-78 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பை முடித்தேன். கோவை மாவட்டத்தில் உள்ள சித்திரைச் சாவடி ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த ஆஸிரமத்திற்கு சுவாமி அந்தர்யோகம் நிகழ்த்த  மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செல்வது வழக்கம். அப்போது இரண்டு மாணவர்களை உடன் அழைத்துச்செல்வார்.  MDA 6837  என்ற எண்ணுள்ள பச்சைநிற அம்பாசிடர் காரில் செல்வார். அந்த வண்டிக்கு டிரைவர் திரு. ஆறுமுகம் அவர்கள்.
ஒவ்வொரு முறை சித்திரைச் சாவடி செல்லும்போதும் இரண்டு மாணவர்களைத் தன்னுடன் அழைத்துச் செல்வது வழக்கம். அப்படிச் சென்ற மாணவர்களில் நானும் ஒருவன். சுவாமி போகும் போது இராமாயணம் கூறி முடித்துவிடுவார். திரும்பும் போது மகாபாரதம் கூறி முடித்துவிடுவார். நாங்கள் சிறுவர்கள் தானே! கதை கேட்டுக்கொண்டே அவர் மடியில் படுத்து உறங்கி விடுவோம். என் தாயின் மடியில் கூட நான் அந்த நிம்மதியை கண்டதில்லை.
திரும்ப அந்த நாட்கள் வரப்போகிறதா! நினைத்தால் இன்றும் கண்ணீர் வழிகிறது.
1977-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு சனிக்கிழமை. மதியம் நானும் என் நண்பர்களும் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தோம். திடீரென்று காவல்துறை  “சைரன் ” ஒலி காதைப் பிளந்தது. மத்திய அமைச்சரும், சுவாமிஜியின் அண்ணன் மகனும், அப்போதைய பாராளுமன்ற வேட்பாளருமான திரு. சி. சுப்பிரமணியம் அவர்கள் பந்தோபஸ்து படை, கூட்டணி கட்சித் தலைவர்கள் படை, பல கார்கள், வேன்கள், அடியாட்கள் புடைசூழ விடுதிக்குள் நுழைந்தார்.
சுவாமிஜி மாடியிலிருந்து இந்த ஆடம்பர நுழைவை பார்த்துவிட்டார். மரியாதை நிமித்தமாக திரு. சி.எஸ். சுவாமிஜியை பார்க்க மாடிக்குச் சென்றார். சுவாமிஜி கோபத்துடன்,  “முதலில் உன் படைகள், பரிவாரங்கள், பந்தோபஸ்துகளை வெளியே அனுப்பிவிட்டு தனி ஆளாக வந்தால் இங்கு வரலாம்.”  என்றார். உடனே திரு. சி.எஸ். கீழே வந்து அவருடன் வந்த ஜீப்கள், கார்கள், வேன்கள், கட்சிக்காரர்கள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு தனி மனிதராக சாலையிலிருந்து நடந்து வந்து மாடிக்கு சென்று சுவாமியிடம் ஆசி பெற்றார்.
அந்தத் தேர்தலிலும் வென்றார். முற்றும் துறந்த சுவாமிக்கு அரசனும் ஆண்டியும் ஒன்று என்ற கருத்தை புரிந்து கொண்டேன்.

திண்டுக்கல்  தெய்வத்திரு. மெளனகுரு சாமி
தபோவன பழைய மாணவர்
(பொன்விழா நடப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் சுமார் 80 வயது பெரியவரான திரு. மெளனகுரு சாமி என்பவரைச்  சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் திருப்பராய்துறையில் 1945-46ஆம் ஆண்டு படித்தவர் என்பதைத் தெரிந்துகொண்டேன். அவர் கூறியவை இங்கே.)
“அந்தக் காலத்தில்  பள்ளியில் நீச்சல் குளம் கிடையாது. பெரிய சாமிதான் எங்களை காவிரி ஆற்றுக்கு அழைத்துச்செல்வார். ஆபத்தில் தப்பிப்பது எப்படி? என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பார். எங்களை அவரே தேய்த்துக் குளிப்பாட்டுவார். எங்க அம்மா கூட என்னை அப்படி குளிப்பாட்டியிருக்க மாட்டார்கள். குளிப்பாட்டுவதன் மூலமாக தினந்தோறும் அவர் ஸ்பரிச தீட்சை எங்களுக்கு கொடுத்தார். சுவாமியிடம் பெற்ற வைராக்கிய உணர்வினால்தான் திண்டுக்கல்லில் ஒரு மில்லாக இருந்த செளந்தரராஜா மில்லை 6 மில்களாக உயர்வடைய செய்ய  என்னால் முடிந்தது. சாதாரண ஆபீஸ் பையனாக உள்ளே வந்த நான் முதலாளிக்கே Special Advisor -ஆக முடிந்தது. அது மட்டுமல்ல மதுரைக்கு வந்த அன்றைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவை எங்கள் மில்லுக்கு என்னால் அழைத்து வரமுடிந்தது, சுவாமியிடம் பெற்ற வைராக்கியத்தினால் தான். எங்களைக் கவனித்த அளவுக்குப் பின்னால் வந்த மாணவர்களை சுவாமி கவனித்திருக்க முடியாது.”

சேலம் டாக்டர். திரு. பி. சண்முகம்
(இவர் தபோவன பொதுக்குழுவில் உறுப்பினராக உள்ளார்.)
நான் சுமார் 35 வருடங்களாக மருத்துவத்துறையில் உள்ளேன். தீய பழக்கங்கள் உள்ள நோயாளிகள் நிறைய பேர் அந்த பழக்கங்களை  விடமுடியாமல் அந்த பழக்கத்துடனேயே இறப்பதைப் பார்த்திருக்கிறேன்.ஆனால், என்னால் மட்டும் அந்த பழக்கங்களை எவ்வாறு விடமுடிந்தது?
இது பற்றி நீண்ட நாள் யோசித்த பிறகு எனக்கு ஒரு உண்மை தெரிந்தது. தபோவனத்தை விட்டு வெளியேறும் போது பெரிய சுவாமிகள் முன்பு மண்டியிட்டு, வாய்பொத்தி வணங்குவோம். அப்போது பெரியசுவாமிகள் நம் தலையில் மீது அவர் கையை வைத்து ஆசீர்வாதம் செய்வார்கள்.சுவாமியின் இந்த ஆசீர்வாதத்தின் பலன் என்னவாக இருக்கும்?இதனால் பிற்காலத்தில் நம் வாழ்க்கையில் என்ன விளைவுகள் நிகழும்? என நான் எண்ணியது உண்டு. அந்த ஆசீர்வாதத்தின் விளைவு தான் தீய பழக்கங்கள் மறைந்தது என்று இப்போது புரிகிறது. நாம் அழியாமல் நம்மை தடுத்தாட்கொள்வது, நம்மைச்சுற்றி அரண் போன்று அமைந்துள்ள நம்முடைய பெரியசுவாமியின் ஆசீர்வாதம் தான்.
சரியான சமயத்தில் நமது முடியைப் பிடித்து இழுத்துவந்து சரியான பாதையைக் காட்டுவதுதான் எஸ்.எஸ்.எல்.சி. முடிக்கும்போது நமக்கு கிடைக்கும் அவருடைய ஆசீர்வாதம்.
பெரிய சுவாமிஜி சமாதி அடைவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன் சேலத்தில் உள்ள அத்வைத ஆஸிரமத்தில் தங்கியிருந்தார். அப்போது சுவாமியின் தோழர் திரு. அவினாசிலிங்கம் செட்டியார் சுவாமியைப் பார்க்க சேலம் வந்திருந்தார். அப்போது அன்பர்கள் சுவாமிஜியின் பாதங்களை தொட்டு வணங்கினர். ஒவ்வொருவரிடமும் சுவாமி நலம் விசாரித்தார். இதைக் கவனித்த அவினாசிலிங்கம் அவர்கள் “வெளியூரிலிருந்து வந்த அன்பர்கள் தங்களுக்குப் பாத நமஸ்காரம் செய்தார்கள். ஆனால் நீங்கள் ஒருவரைக்கூட வாழ்த்தவில்லையே ஏன்?”  என்று கேட்டார்.
அதற்கு சுவாமி, ” நான் அப்படிச்செய்தால் அது அர்த்தமற்றதாகும் அவரவர்கள் செய்த வினைப்பயனை அவரவர்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். கிறிஸ்துவ மதத்தைத்தவிர வேறு எந்த மதமும் பாவம் செய்தவர்களை மன்னிப்பதில்லை.” என்று சுவாமி பதிலளித்தார்.
ஆனால், அதே சுவாமி நாம் படித்து முடித்து ஊருக்கு புறப்படும்போது நம் தலையில் தன் கையை வைத்து ஆசீர்வாதம் செய்தார்கள். அன்பர்களுக்கு ஆசி கூறாத சுவாமி நம்மை மட்டும் ஆசீர்வதித்தார். நாம் எல்லாரும் எவ்வளவு பாக்கியவான்கள்!

திருப்பூர்  டாக்டர்.திரு. ஆர். கே. கந்தசாமி,
விடுதி எண் : 43  (1950-51)
(தபோவன பொதுக்குழு உறுப்பினர்)
1948-ல் நான் 9-ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். விடுமுறை முடிந்து நானும் என் நண்பன் குமாரசாமியும் விடுதிக்கு வராமல் திருச்சி சென்று சினிமா பார்த்து விட்டு இரவு தாமதமாக விடுதிக்கு வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் காலை சுவாமியிடம் ஆஜர் கொடுக்கச்  சென்றபோது எப்போது வந்தீர்கள்? என்று கேட்டார். நாங்களும் நேற்று இரவு வந்தோம் என்று கூறினோம். நான் பார்க்கவில்லையே என்றார்.  “நாங்கள் திருச்சியில் சினிமா பார்த்துவிட்டு காலதாமதமாக வந்தோம் சுவாமி” என்று உண்மையை கூறினோம். சுவாமிக்கு கடும் கோபம் வந்துவிட்டது.
எங்கள் இருவருக்கும் 5 ரூபாய் அபராதம் விதித்தார். உடனே எனது நண்பன் குமாரசாமி துடுக்காக “உண்மையை சொன்னதற்கு தண்டனையா சுவாமி?” என்று கேட்டான். அதற்கு சுவாமி, “உண்மையைச் சொன்னால் தப்பித்துக் கொள்ளலாம் என்றால், நாட்டில் கொலையும் கொள்ளையும் திருட்டும் வன்முறையும் அதிகம் பெருகி விடும். நீ உண்மையைச் சொல்கின்றாய் என்றால்,
1. நீ செய்த தவறுக்கு வருந்துகிறாய் என்பது முதல் பொருள்.
2. இரண்டாவதாக இனி அந்தத் தவறை செய்யமாட்டாய் என்று இரண்டாம் பொருள்.
3. மூன்றாவதாக இந்தத் தவறுக்கு தண்டனை ஏற்க நான் தயாராக இருக்கிறேன் என்றும் பொருள்.
உண்மையைச் சொல்வதில் இவ்வளவு அர்த்தங்கள் உள்ளன”
என்று கூறி எங்கள் சிந்தனையை தெளிவடையச் செய்தார்கள்.
இது இன்று நடந்தது போல் உள்ளது ஆனால், 62 ஆண்டுகள் கடந்து விட்டன.1943-ல் ஆரம்பிக்கப்பட்ட வித்யாவன குருகுலப்பள்ளி முதன்முதலில் திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் ஆலய மண்டபங்களில் தான் நடைபெற்றது. கோவிலுக்கு எதிர்ப்புறமாக உள்ள சத்திரத்தில் தான் விடுதி இருந்தது.
ஆரம்பத்தில் 50 மாணவர்களே விடுதியில் இருந்தனர். வரிசையாகப் பெட்டியும் அதன்மேல் படுக்கையையும் வைத்திருப்போம். பெட்டியின் முன்னால் அமர்ந்து படிப்போம். உறங்கும் பொழுது பெட்டியின் முன்னால் விரித்துப் படுத்துக் கொள்வோம். Tooth brush மற்றும் soapக்கு  அனுமதி கிடையாது. பெட்டியைப் பூட்டக்கூடாது, விலை உயர்ந்த பொருட்களான, வாட்ச், கேமரா முதலியன கூடாது.பிறகு ஹாஸ்டல் தற்போது உள்ள இடத்தில் கட்டப்பட்டது. அதற்குப் பின் பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. தற்போது உள்ள க்ளாஸ் ரூம் கட்டிடங்கள் எல்லாம் ஹாஸ்டலில் உள்ள மாணவர்களின் உழைப்பால் உருவானவை. செங்கல், girder முதலியன எலமனூர் ரயில் நிலையத்திலிருந்து கட்டிடம் கட்டும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டன. மாணவர்கள் வரிசையாக நின்று கொண்டு கைமாறி மாறிப் பொருள்களை எடுத்துச் சென்றார்கள். மாணவர்களின் உழைப்புக்காக அன்று இரவே வடை, பாயசத்துடன் விருந்து சமைக்கப்படும். அதனால் மாணவர்களும் உற்சாகத்துடன் ஒத்துழைத்துனர். இவ்வாறாக diginity of labourம் கற்றுத் தரப்படும்.
பள்ளி, விடுதிக் கட்டிடங்கள் வளர வளர மாணவர்களின் எண்ணிக்கையும் கூடியது. அவ்பொழுதெல்லாம் ஆற்றில் குளிப்பது என்றாலே ஒரு தனி ஆர்வம். தினமும் இரண்டு முறை குளிப்போம். தினமும் ஒரே பாதையில் ஆற்றுக்குள் தண்ணீர் வரை மணலில் சுவாமிஜி நடந்து நடந்து ஒரு தனித் தடமே உருவாகியிருக்கும். எங்களில் சிலர் தினமும் அவருடன் செல்வோம். குளிக்கும் பொழுது நாங்கள் 5, 6 பேர் சேர்ந்து அவரைத் தண்ணீருக்குள் அழுத்திப் பிடித்துக் கொள்வோம். சிறிது நேரம் விட்டுத் திடீரென்று எங்களையெல்லாம் தள்ளி விட்டு மேலே வந்து விடுவார்கள்.
1964-ல் என் திருமணத்திற்கு பின் சுவாமிஜியிடம் ஆசி பெற திருப்பாராய்துறைக்கு சென்ற பொழுது ஏற்பட்ட அனுபவம். பஸ்ஸில் காலை 9.30 மணிக்குத் திருப்பூரிலிருந்து விடுதியை அடைந்து அன்றைய சிற்றுண்டியாகிய இட்லி, மால்ட் முடித்து விட்டு, ஸ்வாமிஜியின் அறைக்குச் சென்றோம். எங்களைப் பார்த்து ஸ்வாமிஜி மிகவும் சந்தோப்பட்டார்கள். ஆசியும் வழங்கினார்கள். நலம் விசாரித்துப் பின்பு என்னிடம் உன் சக தர்மணியைக் கூட்டிச் சென்று நீ விளையாடித் திரிந்த இடத்தையயல்லாம் சுற்றிக் காண்பித்து விட்டு ஆற்றில் குளித்து விட்டு  மதியம் உணவு அருந்த வந்து விடு என்று கூறி அனுப்பிவிட்டார்கள். நாங்களும் பள்ளியைச் சுற்றிப்பார்த்து விட்டு ஆற்றிலும் குளித்து விட்டு, கோவிலுக்கும் சென்று தரிசித்து விட்டு திரும்பினோம். மதியம் உணவு முடித்து 2 மணிக்கு சுவாமிஜியிடம் விடை பெறச் சென்றோம். சுவாமிஜி, “அதற்குள் என்ன அவசரம், உனக்குப் பொங்கல் பிடிக்கும் என்று நாளைக் காலை பொங்கல் செய்யச் சொல்லி இருக்கிறேன். இரவு தங்குவதற்கு ஆசிரியர் குடியிருப்பில் ஒரு வீடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நாளை போகலாம்” என்று கண்டிப்பாகவும், பாசத்துடனும் கூற இரவு தங்கி, காலை உணவு முடித்து விட்டே ஊருக்குத் திரும்பினோம்.
தாய்வீடு சென்று திரும்பிய உணர்வுடன்  திரும்பினோம். தாயன்பிற்கு வேறு உதாரணம் தேவையில்லை என்றே தோன்றிற்று.

திருப்பூர்  திரு. ஆர்.பி. பாலகிருஷ்ணன்,
விடுதி எண் : 79 (1980-81)
கார்த்திகை தீபத்திற்கு முதல்நாளே குலபதி துறவியர்களுடன் திருவண்ணாமலைக்குச் செல்வார். அங்கு திருக்கோயிலிலும், கிரிவலப்பாதையிலும் அன்பர்களுக்கு அருள் பாலிப்பார். மாலையில் மலையில் மகாதீபம் ஏற்றியபின் “அண்ணாமலைக்கு அரோகரா!” என்று கூறிவிட்டுத் திருப்பராய்த்துறைக்கத் திரும்புவார். கார்த்திகை மாத பெளர்ணமி வழிபாடும், விருந்தும் மறுநாள் தான் நடைபெறும். நாங்கள் தபோவனம் முழுவதும் அகல்விளக்கு வைத்து மைசூர் பேலஸ் போல ஜொலிக்கச் செய்வோம்.
அண்ணாமலையிலிருந்து திரும்பும் சுவாமி நாங்கள் விளக்குகள் வைத்த சுவற்றில்  எங்காவது எண்ணெய் வடிந்திருக்கிறதா? என்று உற்றுநோக்கியதை இன்றும் நினைத்துப்பார்க்கிறேன்.
நாங்களும் எங்கள் வீடுகளில் தீபம் வைக்கும்போது சுவர் அசிங்கமாகாதபடி  தீபம் வைக்கிறோம். திருவண்ணாமலையை அக்னி ஸ்தலம் என்பர். நாங்கள் எங்கள் இளமைக் காலத்தில் திருவண்ணாமலையோடு தான் வாழ்ந்தோம்!
புரியவில்லையா?
சுவாமி தபோஅக்னி அல்லவா? அவரோடுதானே நாங்கள் வாழ்ந்தோம்!

திரு. கே. ராமசாமி,
விடுதி எண் : 123 (1955-56)
ஒரு முறை சுவாமிகளுடன் நாங்கள் கோவை சென்றிருந்த சமயம் ஜி.டி. நாயுடு அவர்கள், “குழந்தைகளுடன் சுவாமிகளும் வந்து என் விஞ்ஞான கூடத்தை பார்க்க வேண்டும்.”  என்று அழைத்தார்.
எங்களை அழைத்துக்கொண்டு சுவாமி அங்கு சென்றார். அங்கு நாங்கள் பல அதிசயங்களை பார்த்தோம். பிறகு ஜி.டி.நாயுடு அவர்கள் எல்லாரிடமும் ஒரு பேப்பர், பென்சில் கொடுத்து எங்கள் கருத்துக்களை எழுதித் தரச்சொன்னார். சுவாமியிடமும் கொடுத்தார்.
நாங்கள் அவரைப் புகழ்ந்து தள்ளிவிட்டோம். ஆனால், சுவாமி எழுதியிருந்ததைப் படித்து நாயுடு தலைகுனிந்து நின்றார். சுவாமி அப்படி என்ன எழுதியிருந்தார்? சுவாமி எழுதியதாவது:
 “தாங்கள் ஒரு சிறந்த அறிவாளியாகவும், விஞ்ஞானியாகவும் இருப்பதை பற்றி மகிழ்ச்சி. ஆனால், உங்களுக்குப் பின்னால் வரும் சந்ததியினருக்கு இந்த உண்மைகளைத் தெரிவிக்காமல், சமுதாயத்திற்கு உதவாமல் இருக்கிறீர்கள்.”
என்று எழுதியிருந்தார். அது உண்மைதான். ஏனெனில், இன்றளவும் இந்தியாவுக்கு திரு. நாயுடுவால் எந்தப் பலனும் இல்லை. இதை சுவாமிகள் அன்றே கூறினார்.
ஒருமுறை மத்திய அமைச்சர். திரு. சி. சுப்பிரமணியம் சுவாமியை பார்க்க வந்திருந்தார். வந்தவுடன் திருநீறு, சந்தனம், குங்குமம் இட்டுக்கொண்டு சுவாமியை பார்க்கச் சென்றார். சுவாமி,
“வாரும் சுப்பிரமணியரே! உம் நெற்றியில் இருப்பது காலையில் வைத்த திலகமா? தற்சமயம் வைத்த திலகமா? அல்லது எனக்காக வைத்த திலகமா?”
என்று ஒரு பிடிபிடித்தார். சி.எஸ் உட்பட அனைவரும் சிரித்தனர்.
1954ஆம் ஆண்டு சுவாமியின் தோழர் கல்வி அமைச்சர் திரு. அவினாசிலிங்கம் தபோவனத்திற்கு வருகை புரிந்தார். அவர் ஹிந்தி மொழியைத் தமிழகத்திற்கு கொண்டு வர விரும்பினார். அதற்கு சுவாமி இப்போதைய சூழ்நிலையில் இந்த திட்டம் தோல்வியடையும் என்றார். அதுபோலவே ஆயிற்று.
இளமையில் ஆக்ஸ்போர்டு தேர்வில் வெற்றி பெற்றதற்காக ஒரு தங்க பட்டன் சாமிக்கு கொடுத்திருந்தார்கள். அதை அவினாசிலிங்கம் பார்த்தார். “சுவாமிக்குத் தங்க பட்டன் தேவையில்லை. எனக்குத் தேவை” என்று சொல்லி வாங்கிச் சென்றுவிட்டார்.

பாண்டிச்சேரி திரு. எஸ். ஸ்ரீராம்,
விடுதி எண் : 425 (1979-80)
மாணவப் பருவத்தில் மறக்க முடியாத விழா சரஸ்வதி பூஜை ஆகும். பலகுழுக்களாக பிரிந்து இப்பூஜையை செய்வோம். சுவாமி அதற்கு மதிப்பெண் போடுவார். பரிசு பெறுவதற்காகப் பல ஜிகினா வேலைகளைச் செய்வோம். ஆனால், சுவாமி பகட்டுக்கோ, ஆடம்பரத்துக்கோ மதிப்பெண் போட மாட்டார். நேர்மையான வழிபாட்டுக்கு மட்டுமே மதிப்பெண் கிடைக்கும்.
பணம் வைத்துக்கொள்ளக்கூடாது என்ற கட்டுபாட்டையும் இரகசியமாக மீறி பல பொருட்களை வாங்குவோம். ஆசிரியர்களுக்குப் பரிசுப் பொருட்கள் தருவோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அலங்காரம் செய்வோம். விழா நடைபெறும் உடற்பயிற்சி கூடத்திற்கு வருகின்ற வழியெல்லாம் கொடிகளும், தோரணங்களும் கட்டி அலங்கார வளைவுகள் வைத்துத் தடபுடலாகக் கொண்டாடுவோம்.
இதே நேரத்தில் தபோவனத்தில் இந்த மூன்று நாளும் சக்தி பூஜை நிகழும். அன்று குருகுலத்தில் பெற்ற பயிற்சி தான் இன்று வீட்டிலும், தொழில் புரியும் இடத்திலும் எல்லா விழாக்களையும் சிறப்பாகக்  கொண்டாட முடிகிறது. குலபதியிடம் பெற்ற பயிற்சி வாழ்க்கை முழுவதும் எங்கள் கூடவே வருகிறது.

மதுரை திரு. எம்.எஸ். சுப்பிரமணியன்,
விடுதி எண் : 366 (1971-72)
அப்பொழுது வருடம் 1970. நான் 10ஆம் வகுப்பு மாணவன். அந்த ஆண்டுக்குரிய சரஸ்வதி பூஜை அலங்காரங்கள், பூஜை பஜனை போன்றவற்றில் எங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும். இதற்காக சுவாமிஜி வாழ்ந்த முதல் மாடியிலிருந்த பல அறைகள் எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். அங்கு பூஜை நடக்கும். ஒரு வகுப்பு மாணவர்கள் மற்றொரு மாணவர்களை மிஞ்சும் வண்ணம் திறமையை வெளிப்படுத்துவார்கள். சுவாமி பூஜையில் கலந்து கொண்டு மதிப்பெண் போடுவார். பிறகுப் பரிசு தருவார்.
அந்த வருடம் 9, 10-ஆம் வகுப்புக்கிடையே ஒரே போட்டி. இதைப் புரிந்துகொண்ட அவர் இருவரையும் கண்டித்துப் பரிசைப் பகிர்ந்து கொடுத்தார். அன்றைய பிரார்த்தனைக் கூட்டத்தில் சுவாமி கூறியது,
“நிர்மாலியமான  சிலா ரூபத்தை அலங்கரிக்கப் பருத்தித் துணி மற்றும் மலர்கள் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.தங்க, வைர நகைகளால் அலங்கரிப்பது அணிகலன்கள் மீது நமக்குள்ள ஆசையின் வெளிப்பாடு. ஆலயத்தின் நகைகளின் இருப்புப் பொருள் வேண்டிய பிரார்த்தனைகளை அதிகரிக்குமேயன்றி ஆழ்மனதின் இருப்பை அறிய உதவாது. பொருள் மீது மனிதன் தன்னுடைய பற்றுதலை குறைக்க குறைக்க அவனிடம் உள்ள பிரம்மானந்தம் வெளிப்பட்டு அவனுக்கு பேரானந்தம் கிடைக்கும். இன்றும் திருப்பராய்த்துறை கோவிலையும், அதிலுள்ள சிவபெருமானையும் பார்த்தால் அத்திருமேனி பருத்தி வஸ்திரம் மற்றும் மலர்களால் மட்டுமே அலங்கரிக்கப்பட்டிருக்கும். அந்த எளிமை நமக்கு மனநிறைவைத்தரும். ஆகவே எளிமையை கடைப்பிடிப்போமாக!”

சென்னை. திரு. கே. கோபி கிருஷ்ணன்,
விடுதி எண் : 285(1980-81)
மார்கழி பஜனை “மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்”  என்று கண்ணன் சொன்னான். மார்கழி பிறந்து விட்டால் தினமும் காலை 4.00 மணிக்கு பஜனை கோஷ்டியாக மாறிவிடுவோம். சுவாமி வழிநடத்த அவர் பின்னால் ஒரு நாளுக்கு ஒரு வகுப்பாக திருப்பாவை, திருவெம்பாவை, பஜனைப் பாடல்கள், நாமாவளிகள் பாடிக்கொண்டு தபோவனத்தைச் சுற்றி வலம் வருவோம்.
ஒருபக்கம் தூக்கம் வரும். சுவாமியின் பார்வை பட்டால் தூக்கம் பறந்துவிடும்.
மாட்டுப் பொங்கல். குருகுலத்திற்கு தினமும் பால் வழங்கும் எங்கள் இனிய பசு மாடுகளை சுத்தமாக குளிப்பாட்டி, அலங்காரம் செய்து மாலையில் வழிபாடு நடத்துவோம். கோபால கிருஷ்ணனின் படம் வைத்து மாட்டுப்பட்டியில் சுவாமி தலைமையில் வழிபாடு நடந்த பின் படுக்கை, மாட்டுப்பட்டி இவற்றில் உழைக்கும் அனைத்து தொழிலாளர் குடும்பத்தினருக்கும் எங்கள் விடுதியில் பொங்கலிட்டு மகிழ்வோம்.
காணும் பொங்கல். தமிழகத்தின் பல பாகங்களிலிருந்தும், வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சுவாமிஜியை கண்டு ஆசி பெற நிறைய பேர் வருவார்கள். அப்போது தான் எங்களுக்கு  சுவாமியின் அருமை தெரியும். அவ்வளவு பெரிய மகானுடன் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை நினைத்து பெருமைபடுவோம்.

பெயர் கூற விரும்பாத மாணவர்.
ஒரு பழைய மாணவர் சங்க கூட்டத்தில் பழைய மாணவர் ஒருவர் லஞ்சம் பற்றி கருத்து கேட்டபோது சுவாமி சொன்னது, “இந்தியாவில் லஞ்சத்தை ஒழிப்பது என்பது மற்றுமொரு சுதந்திர போராட்டமாகும். ஆங்கிலேயராகிய அன்னியர்களை விரட்டுவதற்காக விடுதலை போராட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், லஞ்சத்திற்கு எதிரான விடுதலை போராட்டத்தில் நாம் எதிர்க்கப்போவது வெள்ளைக்காரனை அல்ல. நம் கூடவே இருந்து பாரதத்தைப் பாழ்படுத்தும் நம் அண்டை வீட்டுக்காரனை, கடமை துரோகியை. எதிரிகளுடன் சண்டையிடுவதை விடத் துரோகிகளுடன் சண்டையிடுவது மிகச் சிரமமான காரியமாகும்.
உங்களைப் போன்ற இளைஞர்களால்தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும். இலஞ்சம் என்பது தற்காலத்தில் பெரியவர்களால்கூட நியாயப்படுத்தப்படுகிறது. பழைய மாணவர் கூட்டம் ஒருங்கிணைந்தால் லஞ்சத்தை தம் தம் பகுதிகளில் ஒழிக்கமுடியும். முதலில் நாம் அதை வாங்காதிருந்து பழகுவோமாக.
 லஞ்சம் கொடுத்துப் பழகியவர்கள் மிக அவசியமான, நல்ல காரியங்கள் நடைபெறுவதாக இருந்தால் கொடுத்து சாதித்துக்கொள்ளுங்கள் தவறேதுமில்லை.

சின்ன சேலம்  திரு. ஆர்.எம். அருணாச்சலம்,
விடுதி எண் : 68 (1975-76)
ஒவ்வொரு மாதமும் தபோவனத்தில் பெளர்ணமி வழிபாடு நிகழ்வது வழக்கம். மற்ற மாதங்களில் வரும் பெளர்ணமியை விட சித்திரை மாத பெளர்ணமிக்கு  தனிச்சிறப்புண்டு.
நிலவின் முழு அழகைக் கண்டுக்களிக்க வேண்டுமானால் சித்திரா பெளர்ணமிதான் சிறந்த நாள். இந்திர விழாக்கூட சித்திரா பெளர்ணமி அன்று தான் நடந்ததாக கூறுவர். தபோவனத்தில் அன்று மாலை வேளை நெருங்க நெருங்க மாணவர்களுக்கு பெருமகிழ்ச்சி.
காவிரி ஆற்றங்கரையில்  நிலவொளியில் “தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே ” என்று ஆரம்பித்து ஐக்கிய வணக்கம் (கூட்டு வழிபாடு) நிகழும்.
இவ்வழிபாட்டில் கலந்து கொள்ள காவிரி ஆற்றங்கரைக்கு திருச்சி மாவட்டம் முழுவதுமுள்ள அனைத்து உயர் அதிகாரிகளும், பிரமுகர்களும் வருகை புரிவர். வழிபாடு முடிந்தவுடன் அறுசுவை விருந்து உண்டபிறகு சுவாமிஜி தலைமையில் செவிக்கு விருந்து படைப்பது தான் சத்சம்பாவணை நிகழ்ச்சியாகும். மாணவப்பருவத்தில் மறக்கமுடியாத நிகழ்ச்சி காவிரி ஆற்று விருந்து.

மதுரை  பேராசிரியர். திரு. கே. ராமமூர்த்தி,
விடுதி எண் : 37
(தபோவன பொதுக்குழு உறுப்பினர், பழைய மாணவ சங்க செயலர், திருவேடகம் விவேகானந்த கல்லூரி முன்னாள் முதல்வர் மற்றும் செயலர்)
எங்கள் குருகுலத்தில் எங்கள் குருநாதர் சுவாமி சித்பவானந்தருடன் மாணவர்கள் இரவு சாப்பிட்ட பிறகு அரைமணி நேரம் விருப்பம்போல் விளையாடுவார்கள். லீவு நாட்களில் மாணவர்களோடு சுவாமி செஸ் விளையாடுவார். எதிரணியில் விளையாடும் பையனை பார்த்து, “டேய்! அழுவுணி ஆட்டம் ஆடறாண்டா” என்று கிண்டலடிப்பார். அந்தப் பையன், “இல்ல. நல்லாதான் ஆடேறன்” என்று சாமியுடன் சண்டை போடுவான்.
நீச்சல் குளத்தில் சின்ன பையனைத் தன் தோளில் தூக்கி கொண்டுபோய் ஆழமான இடத்தில் போட்டு விடுவார்கள். அவன் திண்டாடும் போது உதவி செய்வார்கள்.
பிரார்த்தனைக் கூடத்தில் எல்லோரும் நிமிர்ந்து உட்கார்ந்தாகவேண்டும். இப்படி விளையாட்டும் கட்டுப்பாடும்  சேர்ந்த ஒரு வாழ்க்கை. மாணவர்கள் சுவாமியை மிகவும் நேசித்தார்கள். அந்த சிறிய வயதில் எப்படிப்பட்ட பெரியவருடன் நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்பது அந்தப் பையன்களுக்குத் தெரியாது.
அதே நேரத்தில் சமுதாயத்தில் பெரிய பதவியில் உள்ளவர்களும் அதிகாரத்தில் உள்ளவர்களும் அந்தஸ்த்தில் உள்ளவர்களும் செல்வாக்கு மிக்கவர்களும் சுவாமியிடம் வரும்போது கைகட்டி, வாய்பொத்தி வருவதை இந்தப் பையன்கள் பார்க்கிறார்கள். பல மேல்நாட்டுக்காரர்கள் வந்து தங்கள் ஐயங்களை போக்கிக்கொண்டு திருப்தியாகத் திரும்புகிறார்கள். இதையயல்லாம்  அறியாப் பருவத்தில் இந்த மாணவர்கள் பார்க்கிறார்கள். ஓரளவு புரிகிறது; புரியாமலும் இருக்கிறது.
படித்து முடித்து வயதான பிறகு சுவாமியுடன் பழகியதே, விளையாடியதே, அவர் அன்புக்கு பாத்திரமானதே பெருமையுடன் நினைத்து பார்க்கப் போதுமானதாக இருக்கின்றன.
இவர்கள் அனைவருமே கடவுளுடன் தான் வாழ்ந்தார்கள். கடவுள் இவர்களுடன் வாழ்ந்தார்.சிலர் இவரை கீதா சாமியார் என்று சொல்வார்கள். சிலர் தென்னாட்டு விவேகானந்தர் என்று சொல்வார்கள்.
சுவாமிஜி அவர்களுடைய காலத்தில் படித்த மாணவர்கள் அனைவரும் பாக்கியசாலிகள் ஏனென்றால் அவர்கள் கடவுளுடன் வாழ்ந்தார்கள். கடவுள்அவர்களுடன் வாழ்ந்தார். நாங்கள் அனைவரும் அவரை கடவுளாகவே பூஜித்து வருகிறோம்.

ஸ்ரீலங்கா  திரு. ஏ. அரன்மகன், 
விடுதி எண் : 46 (1961-62)
சுவாமியின் பாடசாலைக் கல்வியில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவனைத் தண்டிக்கமாட்டார். ஆனால் ஒழுக்கம் தவறுகின்ற மாணவர்களைக் கடுமையாகத் தண்டிப்பார். கடமை நேரங்களில் கண்டிப்பாக இருக்கும் சுவாமி ஓய்வு நேரங்களில் எங்களுடைய சேஷ்டைகளைப் பொறுத்துக் கொள்வார்.

ஈரோடு  திரு. கே. மகாலிங்கம்,
விடுதி எண் : 391 (1984-85)
நாங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது அந்தர்யோகத்திற்கு வருபவர்கள் தங்கள் சந்தேகங்களை போக்கிக்கொள்ள இரவில் தபோவனப் புல்தரையில் கூடுவார்கள். பெரியசுவாமி அவர்களுடைய சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார். ஒருநாள் இரவு பக்தர் ஒருவர் பெருச்சாளியை  விஷம் வைத்து கொன்று விட்டதாகவும், அது பாவமா என்றும் சுவாமியிடம் கேட்டார். சுவாமி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் நிகழ்ச்சி ஒன்றைச் சொன்னார் சுவாமிகள். கரப்பான்பூச்சிகள் நூற்றுக்கணக்கில் ஸ்ரீ ரெங்கநாதருடைய விக்கிரகத்தின் மீது ஊர்ந்து கொண்டிருந்தன.
தீபாராதனை காட்டும்போது திருமால் மீது இவைகளையும் பக்தர்கள் பார்த்தார்கள்.
பக்தர்களுக்குத் தீர்த்தம் வைத்திருக்கும் பாத்திரத்திலும் அவை இருந்தன. ஆராதனை செய்யும் பட்டர்கள் அதை லட்சுமி பூச்சி என்றார்கள். “ஏன் அந்தப் பெயர் வைத்தீர்கள்?” என்று கேட்டால் “திருமால் மீது தங்கியிருக்க திருமகளுக்கு தானே உரிமை உண்டு? அதனால் தான் லட்சுமி பூச்சி” என்கிறோம் என்று பதில் வந்தது.
அப்பூச்சிகளைக் கொல்ல வேண்டுமென்று சொன்ன போது ஆட்சேபணை வந்தது.
நிர்வாகத்திலிருந்த நல்லவர் ஒருவர் அதை பூச்சிமருந்து தெளித்து ஒழித்தார். சமயம் என்ற பெயரால் ஆரோக்கியத்திற்கு இடைஞ்சல் செய்யும் உயிரிகள் விருத்தியடைய இடம் தரக்கூடாது. நோயுண்டு பண்ணும் கிருமிகளைக் கொல்லுவது நம் கடமையாகும். விவசாயம் செய்பவர்கள் பூச்சி மருந்து அடிப்பதில்லையா?
மனிதனுடைய உணவை பங்குபோடும் எலி, பெருச்சாளி இவைகளை கொன்றால் தான்  நாம் பட்டினி கிடக்காமல் இருக்கமுடியும். ஆகவே இவைகளைக் கொன்றே ஆக வேண்டும். கிருஷ்ணன் அர்ஜூனனிடம் பொதுநலனுக்காக உன் ஆசிரியரையும், தாத்தாவையும் கொன்று விடு என்று உபதேசித்தது நினைவில்லையா? மனித வாழ்க்கைக்கு தொல்லை கொடுக்கும் சிற்றுயிர் இனங்களை கொல்வீர்களா? என்று சுவாமி சொன்னார்.
நானும் எங்கள் தோட்டத்திலிருந்த எலிகளை எல்லாம் அழித்தேன்.

ஸ்மரண சுகம்
நெல்லை அரசன் நடேசன்
தபோவன முன்னாள் மாணவர்
48 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்வாமிஜி அவர்களின் பள்ளியில் படித்த மாணவன் என்பது மட்டுமல்ல, அவர்களின் ஸ்பரிஸம் பட்டது இந்தத் தேகம் என்ற ஒரே ஒரு தகுதியுடன் நிற்கிறேன்.

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே.

என்று குரு உருவிற்கு ஏற்றம் சொன்னார் திருமூலர்.

1950 என்று நினைக்கிறேன். காவேரி கரைபுரண்டு ஓடுகின்ற மாமரங்களும், தென்னை மரங்களும், பச்சை வயல்களும் செழித்துச் சூழ்ந்த அந்தத் திருப்பராய்த் துறையில் நான் பெரிய ஸ்வாமிகளைக் கண்டேன். இன்னும் ஸ்வாமிஜி அவர்களின் அந்தக் கம்பீர உருவமும், கண்டிப்பும், கருணையோடு குழந்தைகளான எங்களோடு மற்றொரு குழந்தையாய் ஆடி மகிழ்ந்ததையும், நாங்கள் சேட்டை பண்ணிவிட்டு அவரிடம் வாங்கிய அடியையும் நினைத்துக்கொண்டு அந்த ஸ்மரண சுகத்திலே உங்கள்முன் நிற்கிறேன்.
நாங்கள் இருக்கும்போது நீச்சல் குளம் கிடையாது. அதிகாலையில் ஸ்வாமிகள் எல்லாரையும் குளிக்கக் காவேரி ஆற்றிற்குக் கூட்டிச் செல்வார்கள். சில நேரம் நீரில் அதிக நேரம் மூழ்கி இருப்பார்கள். நாங்கள் அங்கும் இங்கும் அவரைத் தேடுவோம். திடீரென்று வெளியே வருவார்கள். கண்களை மூடிக்கொண்டு கைகளால் காதை அடைத்துக் கொண்டு எங்கள் நடுவிலே கோபியர்களுக்கு நடுவில் நிற்கும் கண்ணன் போல நிற்பார்கள்.
சிறுவர்களான நாங்கள் 30, 40 பேர் இருப்போம். அவர் மேல் தண்ணீரை வாரிவாரி இறைப்போம். பொறுமையாகப் பலநேரம் அப்படியே இருப்பார்கள்; எங்கள் கை வலிக்கும்வரை.
நாங்கள் சிறுவர்கள்தானே. 10, 12 வயதுதானே. சோர்ந்து விடுவோம். அப்போது ஸ்வாமி சிறுவர்களான எங்கள் முகத்தில் தண்ணீர் அடிக்க ஆரம்பித்து விடுவார்கள். நாங்கள் இங்குமங்கும் ஓடுவோம். சில நேரம் எங்களைத் தூக்கித் தனது திரண்ட முதுகின் மீது வைத்துக் கொண்டு தண்ணீரில் தூக்கிப் போட்டு விடுவார்.
“குதி. நீந்தி வா” என்று சொல்வார்கள்.
இப்படி நீச்சல் சொல்லித் தருவார். இப்படிப் பிரியமாக எங்களோடு இருந்தாலும், மிகவும் கண்டிப்பாகவும் இருப்பார்கள். காலையிலே சரியான நேரத்தில் எழுதல், காலம் தவறாது பூஜையில் கலந்துகொள்ளுதல், படித்தல், சிறுசிறு கைங்கர்யங்கள் செய்தல் இவைகளில் ஒழுங்காக இல்லாமல் கவனம் இல்லாது விளையாட்டாக இருந்துவிட்டால் ஸ்வாமிகளுக்கு மிகவும் கோபம் வந்துவிடும். நமக்கு அடி கிடைக்கும்.
அன்னாரின் கோபமும், அவர் கொடுத்த தண்டனையும் இன்று பரிபூர்ண ஆசிர்ம்வாதமாக இருப்பதை உண்மையிலேயே நான் உணர்கிறேன். அந்தச் சின்ன வயதில் படிப்போடு ஒழுக்கத்தையும் பக்தியையும் ஊட்டினார்கள். ஸம்ஸ்கிருதம் தெரியாவிடினும் எத்தனையோ ஸ்லோகங்களை அந்தப் பள்ளியில் கற்றுக்கொள்ள முடிந்தது.
இரவு உணவுக்குப் பின் ஹாஸ்டலின் நடுவிலே உள்ள இடத்தில் நாங்கள் ஓடிவிளையாடிக் கொண்டிருப்போம். ஸ்கேட்டிங் விளையாடுவோம். திடீரென்று மாடியில் இருந்து மிட்டாய், சாக்லேட் மழை பொழியும்.
மேலே ஸ்வாமிஜி இருந்துகொண்டு ஒவ்வொருவருக்காக மிட்டாயை எறிந்து கொண்டிருப்பார்கள். நாங்கள் ஓடி ஓடி அதைப் பொறுக்கி மகிழ்வோம்.
சில இரவுகள் எங்கள் முன் உட்கார்ந்து பல நல்ல கதைகள் சொல்வார்கள். கேள்விகள் கேட்கச் சொல்வார்கள். ஹாஸ்டலைப்  பெருக்கிச் சுத்தம் செய்வது எல்லாம் நாங்கள்தான் செய்ய வேண்டும். இங்கும் இப்போதுள்ள குழந்தைகள்தான் செய்கிறார்கள். குளியலறை மட்டுமல்ல. கக்கூஸையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்வாமிகளும் தலையில் ஒரு முண்டாசு கட்டிக்கொண்டு எங்களுடன் சேர்ந்து சுத்தம் செய்வார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் அநேகமாக இது நடைபெறும். இப்படி எல்லாக் கைங்கர்யங்களிலும் அவர் தானும் சேர்ந்து கொள்வார்.
சிறுவர்கள் நாங்கள்தான் தயார் செய்த உணவைப் பரிமாற வேண்டும். ஹாஸ்டலில் இரவில் சில நேரம் விழித்திருந்து காவல் புரிய வேண்டும். இப்படி குருவின் கைங்கர்யம் என்று எப்போதுமே நாங்கள் ஆனந்தமான ஒரு அனுபவமாகச் செய்து கொண்டிருந்தோம்.
இந்த நேரத்தில் ஒரு உண்மை நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது. ஏகநாதர் என்பவர் ஜனார்த்தன ஸ்வாமி என்ற குருவிடம் வாசம் செய்தாராம். பல ஆண்டுகளாக ஆசிரமத்தில் சமையல்வேலை, ஆசிரம வரவு செலவு கணக்குகள் பார்த்தல், குரு பத்தினிக்குத் தேவையான சாமான்கள் சேகரித்துக் கொடுத்தல், உடன் படிக்கின்ற மாணவர்களைக் கவனித்துக் கொள்ளுதல், குருவிற்குத் தேவையான எல்லாப் பணிகளையும், கைங்கர்யங்களையும் செய்வது இப்படிப் பல ஆண்டுகள் அவர் செய்து வந்தார். படித்தவர்கள் எல்லாம் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்தார்கள்.
ஒருநாள் ஆசிரமக் கணக்கில் 10 பைசா குறைந்துவிட்டது. அதற்காக இரவில் வெகுநேரம் விழித்துக் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். குருநாதரும் ஏதோ விளக்கு எரிந்துகொண்டு இருக்கிறதே என்று கேட்டுக்கொண்டே வந்தார். இவர் அந்தக் கணக்கில் லயித்து இருந்ததால் குருநாதர் வந்ததைக் கவனிக்கவில்லை. ஏகநாதர் ஏதோ சத் விஷயமாகச் சிந்திக்கிறார் என்று குருநாதர் போய்விட்டார். கொஞ்ச நேரம் கழித்து,  “கண்டுபிடித்து விட்டேன், கண்டு பிடித்து விட்டேன்” என்று ஏகநாதர் கூப்பாடு போட்டார்.
உடனே குருநாதர் ஓடிவந்து ‘என்னப்பா? என்ன கண்டு பிடித்தாய்?’ என்று கேடார். ‘10 பைசாவைக் கண்டு பிடித்து விட்டேன்.’ என்று பதில் சொன்னார் ஏகநாதர்.
குருநாதரான ஜனார்த்தன ஸ்வாமி மிகவும் வருத்தப்பட்டார். “நம்மிடம் இந்த சிஷ்யன் பல வருடங்களாக இருக்கிறான். அவனுக்கு ஒரு ஸாட்சாத்காரம் வரவில்லையே. இப்படிக் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறானே” என்று மனதில் நினைத்துக்கொண்டு போய்விட்டார்.
மறுநாள் காலையில் ஏகநாதர் ஆற்றில் குளித்து விட்டு சமையலுக்காகக் குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது அரச மரத்தடியிலே தத்தாத்ரேயரின் தரிசனத்தை குருவின் அருளால் கண்டார். தத்தாத்ரேயருக்கு வணக்கம் செலுத்தினார். மறுபடியும் குடத்தை எடுத்துக்கொண்டு ஆசிரமம் சென்று விட்டார். குடத்தை இறக்கி வைத்துவிட்டு சமையல் காரியங்களைச் செய்யத் துவங்கினார். அப்போது குரு வந்து கேட்டார்.
‘ஏகநாதா, உனக்கு ஏதாவது ஸாட்சாத்காரம் கிடைத்ததா ? ஏதாவது, தெய்வக்காட்சி கண்டாயா?’
‘ஆமாம். குருவின் அருளால் தத்தாத்ரேயரைத் தரிசனம் பண்ணும் பாக்யம் கிடைத்தது.’
குருவிற்கு மிகவும் வருத்தம். ‘வெகு சாதாரணமாக, சுலபமாகக் கிடைத்ததால் அல்லவோ இந்தத் தெய்வீகக்காட்சியின் அருமை இவனுக்குத் தெரியவில்லை. தெய்வீகக் காட்சி கிடைத்த பின்பு உன்மத்தனகப் பித்தனாக அல்லவோ ஆகிவிடுவார்கள். இவன் மறுபடியும் சென்று அடுப்புப் பற்ற வைக்கின்றானே’ என்று கூறினார்.
அதற்கு ஏகநாதர் சொன்னார்: ‘குருநாதா ! நான் இவ்வாசிரமத்தில் 12 ஆண்டுகளாக இருக்கிறேன். என்றைக்காவது உம்மிடம் ஸாட்சாத்காரம் வேண்டும் என்றோ தெய்வீகக் காட்சியைக் காட்டுங்கள் என்றோ கேட்டதில்லையே. எனக்குத் தெய்வம் என்றோ குரு என்றோ வித்யாசம் கிடையாது. தெய்வம் என்றால் எனக்குத் தாங்கள் தானே. அப்படியே தெய்வக் காட்சியை எனக்குக் காட்டினீர்கள். அத்தெய்வம் காட்சி கொடுக்கும்; அப்புறம் போய்விடும். ஆனால், இந்தத் தெய்வமான குருநாதரோ எப்போதும் இங்கேயே இருக்கிறீர்கள். நான் எப்போதும் பார்த்துக் கொள்ளலாம். பேசிக்கொள்ளலாம். ஆனால், அப்படி அந்தத் தெய்வத்தோடு பேசமுடியாதே. நான் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் தங்கள் பாதங்களைப் பிடித்து விடலாம். உங்களுக்கு என்ன கைங்கர்யம் வேணுமானாலும் செய்யலாம். அந்தத் தெய்வத்திற்கு அப்படிச் செய்ய முடியாதே. அப்படி இருக்கும்போது எனக்குக் கண்கண்ட தெய்வமாக இருப்பவர் குருநாதர் ஆகிய தாங்கள் அல்லவோ ?
இதைவிட்டு வேறு எந்தத் தெய்வக்காட்சி வேண்டும்?
கேட்டவுடன், குருநாதரான ஜனார்த்தன ஸ்வாமிகள் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது.
அப்படி ஒரு குரு பக்தியும், குரு கைங்கர்யமும் எங்கட்குக் கிடைத்தது.
50 ஆண்டுகளுக்கு முன் கிடைத்த அந்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். ஏகநாதர் பின்னால் ஒரு பெரிய மகானாக வந்தார். ஸாட்சாத் கண்ணபிரானே அவருக்குச் சிலகாலம் தொண்டனாக வந்து கைங்கர்யம் செய்ததாகச் சொல்வார்கள்.
ஆக, குருவுக்கு நாம் கைங்கர்யம் செய்தால், தெய்வம் கண்டிப்பாக நமக்குச் செய்யும். விபரம் தெரியாத அந்தப் பிஞ்சு வயதிலே எனது தாய் தந்தையர் என்னைச் சித்பவானந்த மகானிடம் ஒப்படைத்தார்கள். ஆதலால், இன்று எனக்குப் பல மகான்களைச் சந்திக்கும் பாக்கியம் கிட்டி உள்ளது. இன்பமும், துன்பமும் ஏதோ ஒரு ஓரத்தில் இருந்தாலும் அறிந்தும் அறியாத ஒரு பேரானந்த நிலையை உணர முடிகிறது.
இதெற்கெல்லாம் காரணம் அறியாத வயதிலே, இவர்தான் குரு என்று தெரிவிக்காமல், எனக்கு குருவாக வந்தார் சித்பவானந்த ஸ்வமிகள்.
நமது பெரிய ஸ்வாமிஜி அவர்கள் விளம்பரத்தை விரும்பவில்லை தான். ஸ்வாமிஜையைப் பற்றி இன்னும் பலருக்குத் தெரியாது.
ஸ்வாமிஜியைத் தெரிந்து அவரைப் போற்றுவதற்கு அல்லது அவர் விட்டுச்சென்ற பல அரிய பொக்கிஷங்களை சிறுவர்களும், தமிழ்நாட்டில் உள்ள பல அன்பர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டுமோ, அவைகளை எல்லாம் அவர்கள் செய்து கொண்டிருந்தாலும், வருகின்ற சந்ததியர்க்கு இன்னும் அதிகமாக, எந்த முறையில் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்களோ அந்த முறையில் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.